முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 19 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.51.15 கோடியாக இருந்தது.
கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவு விற்றுமுதலான ரூ.47.66 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 7 சதவீத வளர்ச்சியாகும். நிகர லாபம் ரூ.5.53 கோடியிலிருந்து 19 சதவீதம் அதிகரித்து ரூ.6.58 கோடியாக காணப்பட்டது.
கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாவது காலாண்டில் பெறப்பட்ட பணி ஆணைகளின் மதிப்பு 39 சதவீதம் அதிகரித்து ரூ.55 கோடியாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் ரூ.116 கோடி மதிப்புக்கு பணி ஆணைகள் பெறப்பட்டன. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் இது ரூ.74 கோடியாக காணப்பட்டது.நிகர லாபம் ரூ.16.35 கோடியிலிருந்து 37 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.22.40 கோடியாக இருந்தது என்று சாந்தி கியர்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.