பணப்பட்டுவாடா வங்கி தொடங்க உரிமம் பெற்றது இந்திய அஞ்சலகத் துறை
இந்தியா போஸ்ட் பணப்பட்டுவாடா வங்கி தொடங்குவதற்கான உரிமத்தை இந்திய அஞ்சலகத் துறை, ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றுள்ளது.
இதுகுறித்து இந்திய அஞ்சலகத் துறை உயரதிகாரி தெரிவித்ததாவது: இந்தியா போஸ்ட் பணப்பட்டுவாடா வங்கி தொடங்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கியிடமிருந்து இந்திய அஞ்சலகத் துறை பெற்றுள்ளது. இதையடுத்து, வணிக ரீதியிலான வங்கி செயல்பாடுகள் தொடங்க உள்ளது. இதற்கான அறிமுக விழா விரைவில் நடைபெறும் என்றார் அவர்.
இந்தியா போஸ்ட் பணப்பட்டுவாடா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் தாற்காலிகமாக ஏ.பி.சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பங்கு விலக்கல் துறையின் இணைச் செயலராக பணியாற்றியவர். பணப்பட்டுவாடா வங்கி தொடங்க ஏற்கெனவே பார்தி ஏர்டெல் மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன. இதையடுத்து, இந்தியா போஸ்ட் மூன்றாவதாக அதற்கான உரிமத்தை பெற்றுள்ளது.
பணப்பட்டுவாடா வங்கி தனிநபர் கணக்கு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரையில் டெபாசிட் திரட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பார்தி ஏர்டெல் ரூ.3,000 கோடி முதலீட்டில் பணப்பட்டுவாடா வங்கி சேவையை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் திரட்டும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 7.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏர்டெல் வங்கி சேவையில் ஏர்டெல்-ஏர்டெல் நிறுவனங்களுக்கிடையில் இலவசமாக பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். பேடிஎம் நிறுவனம் ரூ.400 கோடி முதலீட்டில் பணப்பட்டுவாடா வங்கி சேவையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது.