மும்பை பங்குச் சந்தையில் வார இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 64 புள்ளிகள் அதிகரித்தது.
ஜிஎஸ்டி அமலாக்கம் குறுகிய கால அளவில் சில இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாக இருந்தாலும், நீண்ட கால அளவில் அது பயனளிக்க கூடியதாக இருக்கும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து, வர்த்தகத்தின் கடைசி சில மணி நேரங்களில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தனர்.
வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதை அடுத்து, அத்துறை நிறுவனப் பங்குகளின் விலை 2.24 சதவீதம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து நுகர்வோர் சாதனங்கள், மருந்து, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், பொதுத் துறை நிறுவனப் பங்குகளுக்கும் சந்தையில் வரவேற்பு காணப்பட்டது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், ஐ.டி.சி. நிறுவனப் பங்கின் விலை அதிகபட்சமாக 4 சதவீதம் அதிகரித்து ரூ.323.85-ஆனது. அதனைத் தொடர்ந்து ஸன் பார்மா பங்கின் விலை 2.97 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.80 சதவீதமும், சிப்லா 1.76 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் 1.59 சதவீதமும், பவர் கிரிட் 1.40 சதவீதமும், டி.சி.எஸ். பங்கின் விலை 1.27 சதவீதமும் அதிகரித்தன.
அதேசமயம், அதிக சந்தை மதிப்பைக் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 0.91 சதவீதம் குறைந்து ரூ.1,380.25-க்கும், ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 1.25 சதவீதம் குறைந்து ரூ.3,672.65-க்கும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பங்கின் விலை 1.23 சதவீதம் குறைந்து ரூ.290.10 க்கும் விற்பனையாகின.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 64 புள்ளிகள் அதிகரித்து 30,921 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 16 புள்ளிகள் உயர்ந்து 9,520 புள்ளிகளில் நிலைத்தது.