சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான ஏசிசி இரண்டாம் காலாண்டு லாபம் 32.57 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஏசிசி நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் சிமெண்ட் விற்பனை வாயிலாக ரூ.3,818.21 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,238.69 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 17.89 சதவீதம் அதிகமாகும். நிகர லாபம் ரூ.246.07 கோடியிலிருந்து 32.57 சதவீதம் அதிகரித்து ரூ.326.23 கோடியாக இருந்தது.
சிமெண்ட் விற்பனை ஜூன் காலாண்டில் 61.20 லட்சம் டன்னிலிருந்து 10.13 சதவீதம் அதிகரித்து 67.40 லட்சம் டன்னை எட்டியது என ஏசிசி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏசிசி நிறுவனம் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான கால அளவை நிதி ஆண்டாக கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.