வரி பாக்கி தொடர்பாக வருமான வரி துறையின் நடவடிக்கையை எதிர்த்து பிரிட்டனைச் சேர்ந்த கெய்ரன் எனர்ஜி நிறுவனம் தாக்கல் செய்த மனு சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வரி பாக்கியை வசூல் செய்யும் விதமாக பறிமுதல் நடவடிக்கைகளை வருமான வரித்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வருமான வரி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் அதன் முன்னாள் துணை நிறுவனமான கெய்ர்ன் இந்தியாவில் (தற்போது வேதாந்தா இந்தியா நிறுவனம்) குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.24,504 கோடி திரட்டியது. அதற்காக ரூ.10,247 கோடி மூலதன ஆதாய வரியை செலுத்தத் தவறியதற்காக வருமான வரி துறை கெய்ர்ன் எனர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் மனுதாக்கல் செய்தது. ஆனால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.
அதன் தொடர்ச்சியாகவே தற்போது ஈவுத்தொகை, திரும்ப அளிக்க வேண்டிய தொகையை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் வருமான வரி துறை இறங்கியுள்ளது. மேலும், கெய்ர்ன் இந்தியாவில் முடக்கப்பட்ட கெய்ர்ன் எனர்ஜியின் 9.8 சதவீத பங்குகளை விற்பனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.