சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம், ஜூன் மாதத்துக்கான பங்கு முன்பேரக் கணக்கு முடிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வாரப் பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற-இறக்கத்துடன் காணப்படும் என பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பிரதமரின் அமெரிக்கப் பயணம், ஜிஎஸ்டி அமலாக்கம், பங்கு முன்பேர வணிகக் கணக்கு முடிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளின் தாக்கம் இந்த வாரம் பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
குறிப்பாக, ஜிஎஸ்டி அமலாக்கத்தைப் பொருத்தவரையில் முதலீட்டாளர்களிடம் ஒரு வித பதற்ற நிலையே காணப்படுகிறது.
இவைதவிர, பருவமழை மதிப்பீடு, சர்வதேச நாடுகளின் பொருளாதார வளர்ச்சி புள்ளிவிவரம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்படும் ஏற்றத் தாழ்வு, கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் பங்கு வர்த்தகத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தும் காரணிகளாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு திங்கள்கிழமை (ஜூன்26) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 81 புள்ளிகள் ஏற்றம் கண்ட நிலையில், நிஃப்டி 13 சரிவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.