வீட்டு வசதிக்கு கடனுதவி வழங்கி வரும் ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனம் ரூ.85,000 கோடி நிதி திரட்ட பங்குதாரர்களின் அனுமதியைக் கோர உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் வரும் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான ரூ.85,000 கோடியை திரட்டிக் கொள்ள பங்குதாரர்களிடம் அனுமதி கோரப்படவுள்ளது.
பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்கள் உள்ளிட்ட இதர வழிமுறைகளில் நிதி திரட்ட அனுமதிக்கும் வகையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மூலம் உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்படவுள்ளது என்று ஹெச்.டி.எஃப்.சி.அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திரும்ப மீட்கக் கூடிய-பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்களை வெளியிட்டு அல்லது, சந்தை நிலவரத்தைப் பொருத்து தள்ளுபடி சலுகைகளுடன் கூடிய தனிப்பட்ட முறையில் நிதி நிறுவனங்களுக்கு கடன்பத்திரங்களை ஒதுக்கீடு செய்து ரூ.85,000 கோடி திரட்டப்படும். ஓராண்டு காலத்துக்குள் ஒரு கட்டமாகவோ அல்லது பல கட்டங்களாகவோ இந்த நிதி திரட்டப்படும் என்று ஹெச்.டி.எஃப்.சி. தெரிவித்துள்ளது.