கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் லாபம் பாதிப்புக்குள்ளான நிலையிலும், நடப்பு நிதி ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் வளர்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்று ஐ.சி.ஆர்.ஏ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நான்காம் காலாண்டில் விமானங்களுக்கான எரிபொருள் விலை 37.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், விமான சேவை நிறுவனங்களின் லாப வரம்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறைந்த கட்டணம் காரணமாக விமானப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை எடுத்துக்காட்டும் வகையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் விமானங்களில் இருக்கை நிரம்பும் திறன் 84.4 சதவீதமாக உள்ளது. உலக விமானப் போக்குவரத்து சந்தையில் இந்தியா முன்னிலையில் இருப்பதை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
விமானப் பயணிகள் போக்குவரத்து நடப்பு நிதி ஆண்டில் 22 சதவீதம் முதல் 23 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாத கால நிலவரப்படி இண்டிகோ நிறுவனம் 40.1 சதவீத பங்களிப்புடன் விமானப் போக்குவரத்து சந்தையில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
புதிய வரவான விஸ்டாரா மற்றும் ஏர்ஏசியா நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு முறையே 2.7 சதவீதம் மற்றும் 2.5 சதவீதம் என்ற அளவில் படிப்படியாக உயர்ந்து வருவதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.