பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா இரண்டாவது காலாண்டில் ரூ.11,600.47 கோடி வருவாய் ஈட்டியது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் வாராக் கடன் அளவு குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வருவாய் ரூ.11,469.11 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.11,600.47 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. நிகர லாபம் ரூ.126.84 கோடியிலிருந்து 41 சதவீதம் உயர்ந்து ரூ.179 கோடியானது. வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 13.45 சதவீதத்திலிருந்து குறைந்து 12.62 சதவீதமானது. நிகர வாராக் கடன் விகிதம் 7.56 சதவீதத்திலிருந்து சரிந்து 6.47 சதவீதமாக இருந்தது.
இதையடுத்து, வாராக் கடன் இடர்பாட்டை எதிர்கொள்ள ஒதுக்கீடு செய்யப்படும் தொகை ரூ.2,189.65 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,866.52 கோடியானது என்று பேங்க் ஆஃப் இந்தியா அறிக்கையில் தெரிவித்துள்ளது.