அதானி பவர் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.297.71 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அதானி பவர் இழப்பிலிருந்து மீண்டுள்ளது. கடன் செலவினம் குறைவு மற்றும் அதிக வருவாய் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது.
செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.6,462.47 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டில் ஈட்டிய வருவாய் ரூ.5,670.25 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனம் ரூ.313.05 கோடி இழப்பை சந்தித்திருந்தது. இந்த நிலையில், சாதகமான சூழ்நிலையால் நடப்பு ஆண்டில் நிறுவனம் ரூ.297.71 கோடி நிகர லாபம் ஈட்டியது.
கடந்த நிதி ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் நிறுவனம் ரூ.545.68 கோடி நிகர இழப்பை கண்டிருந்த நிலையில் நடப்பு ஆண்டில் இந்த இழப்பு ரூ.161.14 கோடியாக குறைந்துள்ளது.
சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.6,174.10 கோடியாகும் என்று அதானி பவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1,496 மெகாவாட் மின் கொள்முதல் செய்வது தொடர்பாக அதானி குழுமம் மற்றும் வங்கதேச மின் மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கிடையே அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று அதானி பவர் தலைவர் கௌதம் அதானி தெரிவித்தார்.