காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டதையடுத்து நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற அக்டோபரில் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.58 சதவீதமாக அதிகரித்தது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நுகர்வோர் விலை குறியீட்டு எண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் சென்ற அக்டோபரில் 3.58 சதவீதமாக அதிகரித்தது. கடந்த செப்டம்பரில் இப்பணவீக்கம் 3.28 சதவீதமாகவும், கடந்த ஆண்டு அக்டோபரில் 4.2 சதவீதமாகவும் காணப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் தான் சில்லறைப் பணவீக்கம் 3.89 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது. அதற்குப் பிறகு, அக்டோபரில்தான் இப்பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
செப்டம்பரில் காய்கறிகளுக்கான பணவீக்கம் 3.92 சதவீதம் என்றிருந்த நிலையில் அக்டோபரில் இது இரண்டு மடங்கு அதிகரித்து 7.47 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், பழங்களின் விலை குறைந்துள்ளது.
செப்டம்பரில் (-) 22.51 சதவீதமாக காணப்பட்ட பருப்பு வகைகளுக்கான பணவீக்கம் தொடர்ந்து பின்னடைவைக் கண்டு அக்டோபரில் (-)23.13 சதவீதம் என்ற அளவில் உள்ளது என சிஎஸ்ஓ அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, சில்லறைப் பணவீக்கத்தை அடிப்டையாகக் கொண்டே கடன்களுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.