என்எல்சி இந்தியா நிறுவனம் நிகழாண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபமாக ரூ.642.97 கோடி ஈட்டியுள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டு மற்றும் 2-ஆம் காலாண்டுக்கான, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, முதல் அரையாண்டில், இந்த நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.4,448.79 கோடி ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டின் மொத்த வருவாயைவிட இது 8.10% அதிகமாகும். வரிக்கு முந்தைய லாபத் தொகையாக ரூ.1,337.84 கோடி ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68.18% அதிகம்.
நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் அரையாண்டில், நிகர லாபத் தொகையாக ரூ.642.97 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு நிலையைவிட 21.05% அதிகம்.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-ஆம் காலாண்டில் இந்த நிறுவனம் நிகர லாபத் தொகையாக ரூ.326.88 கோடியை ஈட்டியுள்ளது.
மின் வாரியங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின் சக்தியை அவை முழுவதும் பயன்படுத்தாமல், குறிப்பிட்ட அளவு திரும்ப ஒப்படைப்பு செய்ததன் மூலம் நிறுவனம் தனது மின் உற்பத்தி அளவை, தனது திறனை விட குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் நிகர லாபத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, மின் வாரியங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த மின் சக்தி அளவில் சுமார் 61.51 கோடி யூனிட் குறைவாகப் பயன்படுத்தியதால் நிறுவனத்துக்கு ரூ.178 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.