தொலைத் தொடர்புத் துறையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் வோடஃபோன் வரிக்கு முந்தைய லாபம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 39 சதவீதம் சரிவைக் கண்டது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வோடஃபோன் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.22,579 கோடி வருவாய் ஈட்டியது. ரிலையன்ஸ் ஜியோ வரவையடுத்து, சந்தையில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், சேவை வாயிலான வருவாய் 15.8 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.19,002 கோடியானது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் செயல்பாட்டு லாபம் 39.2 சதவீதம் சரிந்து ரூ.6,704 கோடியானது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.6,704 கோடியிலிருந்து 39.2 சதவீதம் சரிந்து ரூ.4,075 கோடியானது. நடப்பு நிதி ஆண்டின் ஜூலை-செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 0.6 சதவீதம் அதிகரித்து 23.1 சதவீதமாகவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3.3 சதவீதம் உயர்ந்து 20.7 கோடியாகவும் உள்ளது என வோடஃபோன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.