சாதகமான நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து நான்காவது நாளாக வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
சர்வதேச அளவில் காணப்பட்ட சந்தைக்கு சாதகமான நிலவரங்கள், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதி ஆகியவை பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு காரணமாக இருந்தன.
சில்லறை முதலீட்டாளர்கள், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் தங்களது முதலீட்டை அதிகரித்து வருவது பங்கு வர்த்தகத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக இருந்தது.
நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை 1.98 சதவீதம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, மருந்து, எண்ணெய்-எரிவாயு, மின்சார துறை பங்குகளுக்கும் அதிக தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 118 புள்ளிகள் உயர்ந்து 33,478 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 10,326 புள்ளிகளாக நிலைத்தது.