பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகம் லாபகரமாக இருந்தது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு அளவில் காணப்பட்ட சாதகமான நிகழ்வுகளால் பங்குச் சந்தையில் கடந்த வாரம் முழுவதும் காளையின் ஆதிக்கம் நிறைந்து காணப்பட்டது.
திவால் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தாக வெளியான செய்தியும் பங்கு வர்த்தகத்துக்கு வலு சேர்த்தது.
மூடிஸ் நிறுவனம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை உயர்த்தியதும் சந்தைக்கு சாதகமான அம்சமாக இருந்தது.
கடந்த வாரத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.253.79 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக செபி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 31 நிறுவனங்களுள் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், 10 நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தும் காணப்பட்டது.
மருந்து, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. அதேசமயம், வங்கித் துறை பங்குகள் லாப நோக்கம் கருதி பெருமளவில் விற்பனை செய்யப்பட்டன.
ஸன் பார்மா பங்கின் விலை அதிகபட்சமாக 6.09 சதவீதம் அதிகரித்தது. ரூ.2,500 கோடிக்கு கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டியாதக தெரிவித்ததையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 4.38 சதவீதம் அதிகரித்து ரூ.949.50 ஆனது.
இவற்றைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் பங்கின் விலை 4.02 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 2.71 சதவீதமும், ஓஎன்ஜிசி 1.92 சதவீதமும், மாருதி சுஸூகி 1.78 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 1.51 சதவீதமும், என்டிபிசி 1.35 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா 1.27 சதவீதமும், சிப்லா 1.20 சதவீதமும் அதிகரித்தன.
அதேசமயம், ஐசிஐசிஐ வங்கி பங்கின் விலை 2.48 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்பிஐ 1.53 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் 1.13 சதவீதமும் குறைந்தன.
ஏஷியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்யுஎல் நிறுவன பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 336 புள்ளிகள் (1.01%) அதிகரித்து 33,679 புள்ளிகளாக நிலைத்தது.
கடந்த வாரம் இப்பங்குச் சந்தையில் ரூ.21,642.20 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 106 புள்ளிகள் (1.03%) உயர்ந்து 10,389 புள்ளிகளாக நிலைத்தது.
கடந்த வாரம் இப்பங்குச் சந்தையில் ரூ.1,49,893.85 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.