சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் கீழ் தேசிய கொள்ளைலாபம் தடுப்பு ஆணையத்தை அமைப்பதற்கான அனுமதியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை வழங்கும் என தெரிகிறது.
ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன்களை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்காத நிறுவனங்கள் மீது இந்த ஆணையம் நடவடிக்கை எடுக்கும். ஐந்துபேர் அடங்கிய இந்த ஆணையத்தை அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கெனவே தனது ஒப்புதலை தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டியின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்காத நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை கொள்ளைலாபம் தடுப்பு ஆணையம், பாதுகாப்பு தலைமை இயக்குநரகத்திற்கு (டிஜிஎஸ்) பரிந்துரை செய்யும். அந்த இயக்குநரகம் மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அது தொடர்பான அறிக்கையை கொள்ளைலாபம் தடுப்பு ஆணையத்துக்கு வழங்கும்.
விசாரணையில் நிறுவனம் ஜிஎஸ்டி பயன்களை வாடிக்கையாளருக்கு வழங்காதது தெரியவந்தாலோ, அல்லது பயனடையும் வாடிக்கையாளரை கண்டறிய முடியாமல் போனாலோ அந்த தொகையை நுகர்வோர் நல நிதியத்துக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த ஆணையம் உத்தரவிடும்.
இதற்கு உடன்படாத நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்த ஆணையத்துக்கு உண்டு.