மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை 16 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (ஆட்டோமோட்டிவ் பிரிவு) ராஜன் வதேரா செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
பண்டிகை கால கொண்டாட்டங்களையொட்டி செப்டம்பரில் மோட்டார் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. நகரம், கிராமம் ஆகிய இரண்டு சந்தைகளிலுமே வாகன விற்பனை குறிப்பிடத்தக்க வகையில் சூடுபிடித்துள்ளது. மஹிந்திராவைப் பொருத்தவரையில் ஸ்கார்ப்பியோ வாகனங்களுக்கு வாடிக்கையாளர்களிடையே எப்போதுமே மவுசு அதிகரித்தே காணப்படுகிறது. சென்ற செப்டம்பரிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே நிலை வரும் மாதங்களிலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.
சென்ற செப்டம்பரில் மஹிந்திரா நிறுவனம் 53,663 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 46,130 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டில் வாகன விற்பனை 42,545 என்ற எண்ணிக்கையிலிருந்து 19 சதவீதம் உயர்ந்து 50,456-ஆக இருந்தது. ஏற்றுமதி 3,585-லிருந்து 11 சதவீதம் சரிவடைந்து 3,207-ஆக காணப்பட்டது.
ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500, ஸைலோ, பொலேரோ மற்றும் வெரிட்டோ கார்களின் விற்பனை 23 சதவீதம் அதிகரித்து 25,327-ஆக இருந்தது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 16,081-லிருந்து 19 சதவீதம் உயர்ந்து 19,201-ஆனது என்றார் அவர்.