சிறப்பான பருவமழைப்பொழிவு, வேளாண் சாகுபடி பரப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சென்ற செப்டம்பரில் டிராக்டர் விற்பனை 49 சதவீதம் அதிகரித்ததாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் (வேளாண் உபகரணங்கள் பிரிவு) ராஜேஷ் ஜெஜுரிக்கர் தெரிவித்ததாவது:
நிறுவனம் சென்ற செப்டம்பர் மாதத்தில் 45,563 டிராக்டர்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 30,562 டிராக்டர்களுடன் ஒப்பிடுகையில் இது 49 சதவீதம் அதிகம். உள்நாட்டில் டிராக்டர் விற்பனை 29,035 என்ற எண்ணிக்கையிலிருந்து 51.54 சதவீதம் அதிகரித்து 44,000 ஆனது. இதன் ஏற்றுமதி 1,527-லிருந்து 2 சதவீதம் உயர்ந்து 1,563-ஆனது.
நல்ல பருவமழைப் பொழிவு, காரீப் பருவ வேளாண் சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு ஆகியவற்றால் டிராக்டர்கள் விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. பண்டிகை காலத்திலும் இதே சாதகமான நிலை தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.