தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 750-ஆவது கிளையை திறந்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் வைஸ்யா வங்கியின் 750-ஆவது கிளை சென்னை சின்மயா நகரில் திறக்கப்பட்டது. இப்புதிய கிளையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான கடன் திட்டங்கள், வைப்பு நிதி பெறுதல், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சேவைகள் அனைத்தும் வழங்கப்படும்.
சென்னை பெருநகரில் கரூர் வைஸ்யா வங்கிக்கு இது 46-ஆவது கிளையாகும். இப்புதிய கிளை திறப்பின் மூலம் கரூர் வைஸ்யா வங்கிக்கு நாடு தழுவிய அளவில் 750 கிளைகளும், 1,765 ஏடிஎம் மையங்களும் உள்ளன.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குவதற்கு அதிக முன்னுரிமை தந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கரூர் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது.