பார்தி ஏர்டெல் நிறுவனம், கடனில் சிக்கித் தவித்து வரும் டாடா குழுமத்தின் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளது.
தொலைத் தொடர்புத் துறையில் நிலவி வரும் கடுமையான போட்டிகளை சமாளிக்க முடியாமல், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் ரூ.31,000 கோடி கடனில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தை கையகப்படுத்த பார்தி ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 19 தொலைத் தொடர்பு வட்டங்களில் டாடா டெலிசர்வீசஸ் (டிடிஎஸ்எல்) மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்டிரா (டிடிஎம்எல்) ஆகிய நிறுவனங்களின் 4 கோடி வாடிக்கையாளர்களை பார்தி ஏர்டெல் கையகப்படுத்திக் கொள்ளும்.
மேலும், அந்த 19 தொலைத் தொடர்பு வட்டங்களில் உள்ள இரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், 3ஜி, 4ஜி சேவைக்கான அலைக்கற்றை உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு
மாற்றப்படும்.
"கடனில்லா-ரொக்கமில்லா' அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் ரூ.31,000 கோடி கடன் டாடா நிறுவனத்தின் வசமே இருக்கும். அதேசமயம், அலை கற்றை ஒதுக்கீட்டிற்காக மத்திய அரசுக்கு வழங்கும் மொத்த தொகையில், 20 சதவீதமான ரூ.9,000-ரூ.10,000 கோடியை பார்தி ஏர்டெல் அளிக்கும். எஞ்சிய 80 சதவீத தொகையை டாடா நிறுவனமே செலுத்தும் என்று டிடிஎஸ்எல் மற்றும் டிடிஎம்எல் நிறுவனங்கள் தனித்தனியாக வெளியிட்ட செய்திக்குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏர்டெல் நிறுவனத்தின் 7-ஆவது கையகப்படுத்துதல் நடவடிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.