நாட்டின் பணவீக்கம் சென்ற செப்டம்பரில் 2.60 சதவீதமாக குறைந்தது.
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
உணவுப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற செப்டம்பர் மாதத்தில் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.
நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இப்பணவீக்கம் 2.24 சதவீதமாகவும், கடந்த ஆண்டு செப்டம்பரில் 1.36 சதவீதமாகவும் இருந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் 5.75 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் செப்டம்பரில் 2.04 சதவீதமாக சரிந்துள்ளது.
குறிப்பாக, காய்கறிகளுக்கான பணவீக்க விகிதம் 44.91 சதவீதத்திலிருந்து குறைந்து 15.48 சதவீதமாக இருந்தது. அதேசமயம், வெங்காயத்தின் விலை தொடர்ந்து 79.78 சதவீதம் என்ற அளவிலேயே அதிகரித்திருந்தது. முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலை 5.47 சதவீதம் அதிகரித்தது.
சென்ற செப்டம்பரில் தயாரிப்புத் துறை பொருள்களுக்கான பணவீக்கம் 2.45 சதவீதத்திலிருந்து அதிகரித்து 2.72 சதவீதமானது. மின்சாரம், எரிபொருள்களுக்கான பணவீக்கம் 9.99 சதவீதத்திலிருந்து சற்று குறைந்து 9.01 சதவீதமாக இருந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இரண்டு மாதங்களாக ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மேலும், உள்நாட்டில் உற்பத்தி குறைவால் மின்சார கட்டணங்களும் உயர்ந்துள்ளது.
சென்ற செப்டம்பரில் பருப்பு வகைகளின் விலை 24.26 சதவீதமும், உருளைக்கிழங்கு 46.52 சதவீதமும், கோதுமை விலை 1.71 சதவீதமும் குறைந்துள்ளது என்று மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.