தனியார் துறையைச் சேர்ந்த ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 19.3 சதவீதம் அதிகரித்தது.
ஐசிஐசிஐ வங்கியின் துணை நிறுவனமான அந்த நிறுவனம் இதுகுறித்து மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஐசிஐசிஐ லொம்பார்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் ரூ.2,098.05 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த ஆண்டில் இது ரூ.1,948.31 கோடியாக இருந்தது.
நிகர லாபம் ரூ.170.95 கோடியிலிருந்து 19.3 சதவீதம் அதிகரித்து ரூ.204.04 கோடியானது.
மொத்த பிரீமியம் வசூல் ரூ.2,752.66 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,234.19 கோடியாக இருந்தது.
ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு 75 காசுகள் இடைக்கால டிவிடெண்டு வழங்க நிர்வாக குழு ஒப்புதல் தெரிவித்தது.
அரையாண்டுக்கு ஒரு முறை அடிப்படையில் டிவிடெண்டு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த அரையாண்டில் ஐசிஐசிஐ லொம்பார்டு லாபம் ரூ.302 கோடியிலிருந்து 38.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.418 கோடியாகி உள்ளது.
செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி கடன் தீர்வுத்திறம் விகிதம் 2.03 மடங்கிலிருந்து மேம்பட்டு 2.18 மடங்காக இருந்தது என்று ஐசிஐசிஐ லொம்பார்டு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பொதுபங்கு வெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்டியதற்கு பிறகு ஐசிஐசிஐ லொம்பார்டு வெளியிடும் முதல் காலாண்டு நிதி நிலை அறிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.