மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. அதேசமயம், தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் இறக்கத்தைக் கண்டது.
லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு, உலக நாடுகளின் கண்டனத்தையும் மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் உலக நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்தன. வடகொரியா செலுத்திய ஏவுகணை ஜப்பான் வான்பகுதியில் பறந்து பசிபிக் கடலில் விழுந்ததற்கு அந்த நாடு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதனால், ஆசிய நாடுகளின் பெரும்பாலான சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. வர்த்தகத்தின் முடிவில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீட்டை அதிகரித்ததையடுத்து சந்தை சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது.
தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளின் விலை 1.04 சதவீதம் ஏற்றம் கண்டது. நிறுவனங்களைப் பொருத்தவரையில், சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள ஓஎன்ஜிசி பங்கின் விலை அதிகபட்சமாக 4.71 சதவீதம் அதிகரித்து ரூ.166.90-ஆனது.
டாக்டர் ரெட்டீஸ், ஐடிசி, என்டிபிசி, எஸ்பிஐ பங்குகளை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததையடுத்து அந்த நிறுவனப் பங்குகளின் விலை 1.77 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 30 புள்ளிகள் உயர்ந்து 32,272 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 1 புள்ளி குறைந்து 10,085 புள்ளிகளில் நிலைத்தது.