விற்பனையாளர்களுக்கு குறுங்கடன் வசதியை வழங்க பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேஸான் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அமேஸான் இந்தியாவின் இயக்குநரும், பொது மேலாளருமான (விற்பனையாளர்கள் சேவை) கோபால் பிள்ளை தெரிவித்ததாவது:
எங்களது விற்பனையாளர்களின் நிதி வசதி பற்றாக்குறை சிறுதொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதுடன், அவர்களின் பண்டிகை கால விற்பனைக்கான விரிவாக்க திட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை உணர்ந்தே, அவர்களுக்குத் தேவையான நிதி வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் பேங்க் ஆஃப் பரோடாவுடன் அமேஸான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில், வாடிக்கையாளர்களின் கருத்து, விற்பனையாளர்களின் விற்பனை வரலாறு, கணக்கு நடைமுறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு மட்டுமே நிதி வசதி கிடைக்கும் என்றார் அவர்.
பேங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி.எஸ். ஜெயகுமார் தெரிவித்ததாவது:
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள குறு, சிறு நிறுவனங்களின் தேவைகள் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்டுள்ளோம். இதனை உணர்ந்தே, அமேஸான் இந்தியாவுடன் இணைந்து அதன் விற்பனையாளர்களுக்குத் தேவையான வங்கி சேவைகள் வழங்க உறுதிபூண்டுள்ளோம். இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அமேஸான் இந்தியாவில் விற்பனையாளர்களாக இணைந்துள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர்.
ஆண்டுக்கு 18 முதல் 30 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையில் கடன் வசதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டில் அமேஸான் நிறுவனத்தின் 15 முதல் 20 சதவீத விற்பனையாளர்கள் இந்த நிதி வசதியின் மூலம் பயனடைவர் என்றார் அவர்.