விரிவாக்க திட்டங்களுக்காக ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நடப்பு நிதி ஆண்டில் ரூ.800 கோடியை முதலீடு செய்யவுள்ளது.
இதுகுறித்த அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மினோரு கடோ தெரிவித்ததாவது:
சென்ற நிதி ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 22 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனை, நடப்பு 2018-19-ஆம் நிதி ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இதனைக் கருத்தில் கொண்டு, நடப்பு நிதி ஆண்டில் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ரூ.800 கோடியை முதலீடு செய்யவுள்ளோம்.
குறிப்பாக, இந்த முதலீடு ஆலைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க பயன்படுத்திக் கொள்ளப்படும்.
அதேபோன்று, சென்ற நிதி ஆண்டில் 5,700 விற்பனை மையங்களின் எண்ணிக்கையை நடப்பு நிதி ஆண்டில் 6,000-ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.