இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த நிதி ஆண்டில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
தேவை அதிகரித்ததையடுத்து சென்ற 2017-18 நிதி ஆண்டில் 1.55 கோடி டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. முந்தை நிதி ஆண்டின் இறக்குமதியான 1.42 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம் என அந்த சங்கம் கூறியுள்ளது.
ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் 60 சதவீதம் பாமாயிலாகும். உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து வருவதன் காரணமாக மலேசியா ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றது. அதிலிருந்து அந்த நாடு அதிக அளவிலான பாமாயிலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியாவும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் கச்சா பாமாயில் இறக்குமதிக்கான சுங்க வரியை 30 சதவீதத்திலிருந்து 44 சதவீதமாகவும், ஆபிடி பாமாயிலுக்கான வரியை 40 சதவீதத்திலிருந்து 54 சதவீதமாகவும் உயர்த்தியது.