உணவுப் பொருள்களின் விலை சரிவால், மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற மார்ச் மாதத்தில் 2.47 சதவீதமாக குறைந்தது.
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற மார்ச் மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை கணிசமான அளவில் சரிந்தது. அதிலும் எட்டு மாதங்களுக்குப் பிறகு, காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, இறைச்சி, மீன் விலை ஆகியவற்றின் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது.
இதையடுத்து, மார்ச்சில் பணவீக்கம் 2.47 சதவீதமாக குறைந்தது. இது, முந்தைய பிப்ரவரி மாதத்தில் 2.48 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 5.11 சதவீதமாகவும் அதிகரித்திருந்தது.
சென்ற பிப்ரவரியில் 0.88 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் மார்ச்சில் 0.29 சதவீதமாக குறைந்தது.
மேலும், பருப்பு வகைகளுக்கான பணவீக்கம் 20.58 சதவீதமாகவும், காய்கறிகள் 2.70 சதவீதம், கோதுமை 1.19 சதவீதம், முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றுக்கான பணவீக்கம் 0.82 சதவீதமாகவும் குறைந்து காணப்பட்டது.
அதேசமயம், வெங்காயத்துக்கான பணவீக்கம் 42.22 சதவீதமாகவும், உருளைக்கிழங்கிற்கான பணவீக்கம் 42.22 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது.
தயாரிப்பு துறை பொருள்களுக்கான பணவீக்கம் 3.03 சதவீதமாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கான பணவீக்கத்தை 3.81 சதவீதத்திலிருந்து 4.70 சதவீதமாக அதிகரித்தது.
அதேசமயம் மார்ச்சில் சர்க்கரையின் விலை 10.48 சதவீதம் சரிந்தது.
சென்ற ஜனவரி மாதத்துக்கான பணவீக்கம் மறுமதிப்பீட்டில் 3.02 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இது முன்பு, 2.84 சதவீதம் என தற்காலிகமாக மதிப்பிடப்பட்டிருந்தது என மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.