நடப்பாண்டில் வழக்கமான அளவு பருவமழை இருக்கும் என்ற இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பு வேளாண் உற்பத்தியில் சாதனை அளவை எட்ட உதவும் என்று வேளாண் துறை செயலர் எஸ்.கே. பட்நாயக் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
வேளாண் நடவடிக்கைகள் மற்றும் நமது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு தென்மேற்கு பருவமழை என்பது உயிர்நாடியாக உள்ளது. இந்தியாவில் 50 சதவீத வேளாண் குடிமக்கள் அதனை நம்பியே உள்ளனர். இது தவிர வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகள் மூலமாக கிடைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் அந்த பருவமழையை மட்டுமே சார்ந்துள்ளது.
எனவே, தென்மேற்கு பருவமழை குறித்த சாதகமான அறிவிப்பு ஜுனில் தொடங்கும் கரீப் பருவ விதைப்பு பணிகளுக்கு மிகவும் ஊக்கம் தருவதாக இருக்கும். இதனால், நடப்பாண்டில் உணவுப் பொருள்கள் உற்பத்தி 27.75 கோடி டன்னை தாண்டி வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.