வீட்டு வசதி தேவைகளுக்கு கடனுதவி அளித்து வரும் இந்தியாபுல்ஸ் நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.1,030 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ககன் பங்கா கூறியதாவது:
வீட்டு கடனுக்கான தேவை முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புணே நகரங்களில் இதற்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.1,030 கோடியாக இருந்தது. 2016-17 நிதி ஆண்டின் இதே கால அளவு நிகர லாபமான ரூ.840 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகமாகும்.
சென்ற முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,906.4 கோடியிலிருந்து 32.4 சதவீதம் அதிகரித்து ரூ.3,847 கோடியானது. மேலும், கடன்வழங்கும் நடவடிக்கைகளும் ரூ.1,03,705.4 கோடியிலிருந்து 27.2 சதவீதம் உயர்ந்து ரூ.1,31,902.8 கோடியானது.
நிறுவனம் கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 0.85 சதவீதத்திலிருந்து 0.77 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 0.36 சதவீதத்திலிருந்து 0.34 சதவீதமாகவும் குறைந்துள்ளன. சென்ற நிதி ஆண்டில் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான ரூ.45,000 கோடியை கடன் சந்தையிலிருந்து திரட்டினோம். இந்த ஆண்டுல ரூ.50,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.