சாதகமற்ற சர்வதேச மற்றும் உள்ளூர் நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மந்த நிலையுடன் காணப்பட்டது.
பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி முதலீட்டாளர்கள் அவற்றை விற்பனை செய்தனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரும்பப் பெற்றது உள்ளிட்ட நிகழ்வுகள் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின.
வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ள நிதி கொள்கையில் கடனுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தலாம் என்ற நிலைப்பாடும் முதலீட்டாளர்களை பாதித்தது.
ரியல் எஸ்டேட் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் லாப நோக்கு கருதி விற்பனை செய்ததையடுத்து அத்துறை குறியீட்டெண் 1.07 சதவீதம் சரிந்தது.
வங்கி 1.04 சதவீதமும், மின்சாரம் 0.98 சதவீதமும், பொதுத் துறை நிறுவனங்கள் 0.88 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 0.88 சதவீதமும், உள்கட்டமைப்பு 0.76 சதவீதமும், உலோகம் 0.65 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 0.64 சதவீதமும் சரிந்தன.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் கிடைத்த அதிக வரவேற்பால் தகவல் தொழில்நுட்பத் துறை குறியீட்டெண் 4.80 சதவீதம் உயர்ந்தது. இதைத் தவிர, தொழில்நுட்பம், மோட்டார் வாகன துறை பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், யெஸ் வங்கி பங்கின் விலை 3 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி பங்கின் விலை 2.49 சதவீதமும் சரிந்தன. டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி, எல் & டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், இன்டஸ்இண்ட் வங்கி, ஸன் பார்மா டாக்டர் ரெட்டீஸ், ஓஎன்ஜிசி, மாருதி சுஸுகி, பவர் கிரிட், ஐடிசி பங்குகளின் விலை 2.29 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
அதேசமயம், சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டிசிஎஸ் பங்கின் விலை 6.76 சதவீதமும், இன்ஃபோசிஸ் 4.02 சதவீதமும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 11புள்ளிகள் சரிந்து 34,415 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 1 புள்ளிகள் மட்டுமே குறைந்து 10,564 புள்ளிகளில் நிலைபெற்றது.