பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), தகவல் பயன்பாட்டு சேவைக்காக மத்திய அரசின் தேசிய மின் ஆளுமை சேவை நிறுவனத்துடன் (என்இஎஸ்எல்) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் பொது மேலாளர் ஆர்எம்.ஏ. அழகப்பன் கூறியதாவது:
திவால் வழக்குகளுக்காக மத்திய அரசு அமைத்த இந்தியாவின் முதல் தகவல் தரும் நிறுவனம் என்இஎஸ்எல் ஆகும். தகவல் பயன்பாட்டு சேவைகளுக்காக இந்த நிறுவனத்துடன் ஐஓபி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி கடன்கள் மற்றும் கடனை செலுத்த தவறியது குறித்த ஆதாரமான விவரங்களை உயர் தரத்தில் பெறமுடியும். இதன் மூலம், கடன் வழங்குபவர்கள், கடன் பெறுபவர்கள், கடனை திரும்பச் செலுத்துபவர்கள் மற்றும் கடனை செலுத்தத் தவறியவர்கள் குறித்த மேலும் வெளிப்படையான பட்டியலை வங்கி பராமரிக்க முடியும். கடன் வழங்கல் நடவடிக்கைகளில் வங்கிகள் தெளிவான முடிவுகளை எடுக்க இந்த தகவல் பயன்பாட்டு சேவை ஒப்பந்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார் அவர்.