பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சென்ற ஜூலை மாதத்தில் ரூ.23.96 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி என்எஸ் வெங்கடேஷ் பிடிஐ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
உள்நாட்டில் பரஸ்பர நிதி வர்த்தகத்தில் 42 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சென்ற ஜூன் மாதத்தில் ரூ.22.86 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிலையில், ஒரே மாதத்தில் அதாவது கடந்த ஜூலையில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.23.96 லட்சம் கோடியாகியுள்ளது. கடந்தாண்டு ஜூலையில் இது ரூ.19.97 லட்சம் கோடியாக காணப்பட்டது.
பரஸ்பர நிதி திட்ட விழிப்புணர்வு பிரசாரங்களை நிறுவனங்கள் அதிக அளவில் கொண்டு சேர்த்ததன் விளைவாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்களின் பங்களிப்பும் வலுவான அளவுக்கு அதிகரித்துள்ளது.
மொத்தமாக ஒரு பெரிய தொகையை சேமிப்பதற்கு பதிலாக, முதலீட்டாளர்கள் தவணை முறை அடிப்படையில் பரஸ்பர நிதி திட்டங்களில் சிறிய அளவில் தொடர்ச்சியாக சேமிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன் பயனாக, சில்லறை பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் ஜூன் இறுதியில் ரூ.9.61 லட்சம் கோடியாக இருந்த முதலீடு ஜூலையில் ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
மேலும், கடந்த ஜூலையில் மட்டும் பரஸ்பர நிதியங்களில் 9 லட்சம் பேர் புதிதாக இணைந்ததையடுத்து, பரஸ்பர நிதி கணக்குளின் எண்ணிக்கை 7.46 கோடியிலிருந்து 7.55 கோடியாக அதிகரித்துள்ளது என்றார் அவர்.