முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் சாதனை உச்சங்களைத் தொட்டன.
சர்வதேச நாடுகளின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 30 காசுகள் சரிவடைந்து 70.11-ஆக ஆனது ஆகியவற்றுக்கிடையிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் தொடர்ச்சியாக தங்களது முதலீட்டை அதிகரித்தனர்.
அதன் எதிரொலியாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு முதல் முறையாக ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டி வரலாறு படைத்தது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 51 புள்ளிகள் உயர்ந்து 38,336 புள்ளிகளை எட்டி புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு சென்செக்ஸ் 38,285 புள்ளிகளைத் தொட்டதே சாதனையாக கருதப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 11 புள்ளிகள் உயர்ந்து 11,582 புள்ளிகளில் முடிவடைந்து தனது முந்தைய சாதனையை (11,570 புள்ளிகள்) முறியடித்தது.