பரஸ்பர நிதி துறை நிறுவனங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கோடியாக உயரும் என ஹெச்டிஎஃப்சி தலைவர் தீபக் பரேக் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் பரஸ்பர நிதி திட்டங்களின் பரவலாக்கம் என்பது மிகக் குறைவாகவே உள்ளது. உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பு 62 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவில் அது 11 சதவீதமாக மட்டுமே உள்ளது. எனவே, இதற்காக நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. மாறாக பரஸ்பர நிதி சந்தையில் அதிக அளவில் வர்த்தக வாய்ப்புகள் உள்ளதை நாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியர்களின் சேமிக்கும் பழக்கம் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளிலிருந்து மாற்றமடைந்து நிதி சேமிப்பை நோக்கித் திரும்பியுள்ளது. இது பின்னடைவைக் காண்பதற்கான வாய்ப்பில்லை. எனவே பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு உயர இந்த நிதி சேமிப்பு பழக்கம் நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.
தற்போதைய நிலையில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.24 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நிலையில், மிகச் சிறந்த பணிச் சூழலுடன் பெரும்பாலோனோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகி அவர்களது கவனம் நிதி சேமிப்பு பக்கம் திரும்பும் பொழுது அடுத்த ஐந்து ஆண்டுகளில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் கோடியை எட்டும் என்று தீபக் பரேக் தெரிவித்தார்.