கார் விலை 3 சதவீதம் வரை உயருகிறது: போக்ஸ்வேகன்
ஜெர்மனியைச் சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்துவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மூலப் பொருள்கள் செலவினம் அதிகரிப்பு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் காரணமாக கார்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் அனைத்து மாடல்களின் விலையும் 3 சதவீதம் வரை உயர்த்தப்படவுள்ளது. இந்த விலை உயர்வு அடுத்தாண்டு ஜனவரி 1 -ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போக்ஸ்வேகன் தவிர, மாருதி சுஸுகி, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் இசுசூ மோட்டார் இந்தியா உள்ளிட்ட இதர முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களும் ஜனவரியிலிருந்து விலையை உயர்த்தவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.