சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆண்டுக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு அடுத்தாண்டு மார்ச் 31 வரையில் நீடித்துள்ளது.
ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தங்களது விற்பனை, கொள்முதல் குறித்த முழு விவரங்களையும், தாங்கள் பெற்ற உள்ளீட்டு வரி பலன்களையும் ஆண்டுக்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் 2017-18 ஆண்டுக்கான விவரங்களை தாக்கல் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான கடைசி தேதி நடப்பாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நிதி அமைச்சகம் நீடித்துள்ளது.
நேரடி வரிகள் வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வர்த்தகர்கள் ஜிஎஸ்டிஆர்-9, ஜிஎஸ்டிஆர்-9ஏ மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 2019 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான படிவங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி-யின் பொது வலைதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.