முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனமான சாந்தி கியர்ஸ் டிசம்பர் காலாண்டில் விற்றுமுதல் வாயிலாக ரூ.53.95 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.53.95 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் இது ரூ.51.15 கோடியாக காணப்பட்டது.
வரிக்கு முந்தைய லாபம் ரூ.6.58 கோடியிலிருந்து 43 சதவீதம் அதிகரித்து ரூ.9.41 கோடியானது. ஒன்பது மாத கால அளவில் வரிக்கு முந்தைய லாபம் லாபம் ரூ.22.40 கோடியிலிருந்து 16 சதவீதம் உயர்ந்து ரூ.25.92 கோடியானது.
மூன்றாவது காலாண்டில் ஆர்டர்களின் மதிப்பு 13 சதவீதம் உயர்ந்து ரூ.59 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு ரூ.116 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.125 கோடியாகி உள்ளது.
நடப்பு 2017-18 நிதி ஆண்டுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.1 வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சாந்தி கியர்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.