பாரத ஸ்டேட் வங்கி குழுமத்தின் இழப்பு மூன்றாம் காலாண்டில் ரூ.1,886.57 கோடியாகி உள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கி, நிகர லாபமாக ரூ.2,152.14 கோடியை ஈட்டியிருந்தது. ஆனால் வாராக் கடன் அதிகரிப்பால் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கிக்கு ரூ.1,886.57 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 7.23 சதவீதத்திலிருந்து இரட்டை இலக்கமான 10.35 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பில் இது ரூ.1,08,172.32 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,99,141.43 கோடியாகியுள்ளது. நிகர வாராக் கடன் விகிதம் 4.24 சதவீதத்திலிருந்து உயர்ந்து 5.61 சதவீதமாகியுள்ளது. ரூபாய் மதிப்பில் இது ரூ.61,430.45 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.1,02,370.12 கோடியானது.
வங்கியின் வட்டி சாரா வருவாய் ரூ.11,057 கோடியிலிருந்து 29.75 சதவீதம் சரிவடைந்து ரூ.8,084 கோடியாகவும், கட்டணம் சாரா வருவாய் 18.38 சதவீதம் குறைந்து ரூ.11,755 கோடியாகவும் இருந்தது. அதேசமயம், கட்டணம் சார்ந்த வருவாய் ரூ.4,710 கோடியிலிருந்து 5.71 சதவீதம் அதிகரித்து ரூ.4,979 கோடியானது என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.