ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) மூன்றாவது காலாண்டில் ரூ.1,950 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் கே. சுரானா தெரிவித்துள்ளதாவது: ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.1,950 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.1,590 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம் அதிகம்.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் மூலம் கிடைக்கும் லாபம் 6.38 டாலரிலிருந்து அதிகரித்து 9.04 டாலரானது. இதன் காரணமாகவே, நிறுவனத்தின் நிகர லாபம் சிறப்பான அளவில் உயர்ந்தது. மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.55,471 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.62,832 கோடியானது.
உள்நாட்டில் பெட்ரோலிய பொருள்கள் விற்பனை டிசம்பர் காலாண்டில் 3.4 சதவீதம் உயர்ந்து 2.68 கோடி டன்னாக இருந்தது. இதில், பெட்ரோல் விற்பனை 7.1 சதவீத வளர்ச்சியையும், டீசல் 2.3 சதவீத வளர்ச்சியையும், எல்பிஜி 9.2 சதவீத வளர்ச்சியையும், விமானங்களுக்கான பெட்ரோல் 7.7 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருந்தன என்றார் அவர்.