மத்திய அரசின் வரி ஏய்ப்புத் தடுப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தால் மாதாந்திர சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று நிதியமைச்சக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமைச்சரவை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஜிஎஸ்டி கணக்குத் தாக்கல் முறையில் உள்ள குழப்பங்கள் நீங்கி, நிலைமை ஸ்திரமடைந்தால், பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகம் முழு வீச்சில் செயல்படத் தொடங்கும்.
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் விவரங்களையும், வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரங்களையும் அந்த இயக்குநரகம் முழுமையாக ஒப்பீட்டு ஆய்வு செய்யும்.
அதற்குப் பிறகு, வரி ஏய்ப்புகள் பெரும்பாலும் தடுக்கப்படும். இதன் விளைவாக மாதத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வருவாய் இருக்கக் கூடும்.
ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.7.44 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான எட்டு மாதங்களில் மட்டும் ரூ.4.44 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகும் என்று எதிர்பர்க்கப்படுகிறது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.