பிட்காயின் மற்றும் பிற மெய்நிகர் நாணயங்களை வாங்குவதற்காக, தனது வங்கி மட்டும் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு சிட்டி இந்தியா வங்கி தடை விதித்துள்ளது.
மெய்நிகர் நாணயங்கள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிட்டி இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிட்காயின் மற்றும் பிற மெய்நிகர் நாணயங்களை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் சிட்டி இந்தியாவின் கடன் அட்டைகள் மற்றும் வங்கி அட்டைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுளது.
மெய்நிகர் நாணயங்கள்குறித்து உலக அளவிலும், இந்திய அளவிலும் சந்தகம் இருந்து வருகிறது.
பிட்காயின்கள் போன்ற மெய்நிகர் நாணயங்கள் பொருளாதார மற்றும் சட்ட ரீதியிலும், நடைமுறை சாத்தியம், வாடிக்கையாளர் பாதுகாப்பு ஆகிய வகையிலும் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியே அச்சம் தெரிவித்துள்ளது.
இந்தக் காரணங்களால், அத்தகைய மெய்நிகர் நாணயப் பரிவர்த்தனைக்கு சிட்டி பேங்க் அட்டைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.