பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி எதிரொலி! பங்குச் சந்தைகளில் ஏற்ற - இறக்க வாரம்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி எதிரொலி! பங்குச் சந்தைகளில் ஏற்ற - இறக்க வாரம்

இரண்டு வாரங்களாக தொடர் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள் கடந்த வாரம் அதிலிருந்து மீண்டு வந்தது. இந்த நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகாரால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன்

இரண்டு வாரங்களாக தொடர் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள் கடந்த வாரம் அதிலிருந்து மீண்டு வந்தது. இந்த நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகாரால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 
சர்வதேச அளவில் காணப்பட்ட சாதகமான சூழ்நிலைகளால் கடந்த வாரத்தில் பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
இந்திய தொழிலக உற்பத்தி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டது, சில்லறைப் பணவீக்கம், பொதுப் பணவீக்கம் ஆகியவை கணிசமான அளவில் குறைந்துள்ளது உள்ளிட்ட மத்திய அரசின் புள்ளிவிவர வெளியீடுகளும் சந்தையின் ஏற்றத்துக்கு மேலும் பக்கபலமாக அமைந்தது.
இருப்பினும் வார இறுதியில் வெளியான நிறுவனங்களின் பல்லாயிரம் கோடி மோசடி புகாரால் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. குறிப்பாக, வங்கித் துறை பங்குகள் அதிக இழப்பை சந்தித்தது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத் துறை வங்கியாக திகழும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது சந்தையின் போக்கையே தடம் மாறச் செய்தது.
இந்த மாபெரும் முறைகேடு கண்டறியப்பட்டதன் எதிரொலியாக, பொதுத் துறை வங்கிப் பங்குகளின் விலை 3 சதவீத அளவுக்கு சரிவைக் கண்டன.
பங்குச் சந்தையில் காணப்பட்ட அசாதாரண சூழலையடுத்து, அந்நிய முதலீட்டாளர்களும் தங்கள் கைவசம் இருந்த பங்குகளை விற்று விறுவிறுவென வெளியேறத் தொடங்கினர்.
இதன் காரணமாக, கடந்த வாரத்தில் மட்டும், அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,678.87 கோடி மதிப்பிலான நிறுவனப் பங்குகளை விற்று பங்குச் சந்தைகளை விட்டு வெளியேறியுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
பொதுத் துறை வங்கியில் நடைபெற்ற மெகா முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, பங்குச் சந்தைகளில் அத்துறை சார்ந்த குறியீட்டெண் 1.68 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. இதைத் தொடர்ந்து, நுகர்வோர் சாதனங்கள் 1.21 சதவீதமும், மோட்டார் வாகனம் 1.08 சதவீதமும், தொழில்நுட்பம் 0.56 சதவீதமும், மருந்து 0.56 சதவீதமும், ஐபிஓ 0.50 சதவீதமும், ரியல் எஸ்டேட் 0.39 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 0.21 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 0.15 சதவீதமும், மின்சாரம் 0.13 சதவீதமும் சரிந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், முதலிடத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி பங்கின் விலை 8.32 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.271.75 ஆனது. இந்த வங்கி 2016 டிசம்பர் காலாண்டில் ரூ.2,610 கோடி நிகர லாபம் ஈட்டிய நிலையில், 2017 டிசம்பர் காலாண்டில் ரூ.2,416.37 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. அதேசமயம், மொத்த வருவாய் 17.4 சதவீதம் அதிகரித்து ரூ.62,887.06 கோடியாக இருந்தது.
இதைத் தொடர்ந்து, யெஸ் வங்கி பங்கின் விலை 4.19 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 3.54 சதவீதமும், ஐடிசி 1.82 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 1.76 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் 1.44 சதவீதமும், டிசிஎஸ் 1.39 சதவீதமும், ஸன் பார்மா 1.28 சதவீதமும், மாருதி சுஸூகி பங்கின் விலை 1.19 சதவீதமும் குறைந்தது.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து, ஹெச்டிஎஃப்சி பங்கின் விலை 2.84 சதவீதமும், ரிலையன்ஸ் 2.64 சதவீதமும், கோட்டக் வங்கி 2.11 சதவீதமும், விப்ரோ 1.82 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 1.56 சதவீதமும், பவர் கிரிட் 1.27 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 1.21 சதவீதமும், ஏஷியன் பெயிண்ட் பங்கின் விலை 1.19 சதவீதமும் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 5 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து 34,010 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த இருவாரங்களில் சென்செக்ஸ் 2,044 புள்ளிகளை இழந்த நிலையில் இந்த சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.17,444.72 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 2.65 புள்ளிகள் குறைந்து 10,452 புள்ளிகளில் நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,27,267.45 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com