சென்ற ஜனவரி மாதத்தில் மூலதன சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் மூலம் ரூ.1.19 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செபி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு ஆண்டு ஜனவரியில் மூலதன சந்தைகளில், பங்குகள், மற்றும் கடன்பத்திரங்கள் போன்றவற்றில் பங்கேற்பு ஆவணங்கள் மூலம் அந்நிய முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீடு ரூ.1,19,556 கோடியாக இருந்தது. டிசம்பரில் இந்த முதலீடு, ரூ.1,24,810 கோடியாக காணப்பட்டது.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இவ்வகையிலான முதலீடு ரூ.1,10,355 கோடியாக இருந்தது. அதையடுத்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற ஜனவரி மாதத்தில்தான் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு இந்த அளவுக்கு சரிவடைந்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பும் அந்நிய முதலீட்டாளர்கள் பதிவுகள் எதையும் மேற்கொள்ளாமல் அவர்கள் நேரடியாக முதலீடு செய்யும் வாய்ப்பினை பங்கேற்பு ஆவணங்கள் வழங்குகின்றன. இருப்பினும், இதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அதற்கான விதிமுறைகளை செபி அண்மையில் கடுமையாக்கியது.
அதன் எதிரொலியாக, சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து, இவ்வகை ஆவணங்கள் மூலமான முதலீடு குறையத் தொடங்கியது. குறிப்பாக, சென்ற செப்டம்பரில் இது 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.