முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழா எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 2017ஆம் ஆண்டுக்கான தங்க மயில் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.எஸ். கோபாலரத்னம் கூறியது:
பொதுக் காப்பீட்டுத் துறையில் கடுமையான போட்டிகளுக்கிடையில், நிறுவனம் 2017ஆம் ஆண்டுக்கான தங்க மயில் விருதை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பொதுக் காப்பீட்டுத் துறையில் 15 ஆண்டு கால சேவையில், நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்பட்டதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் மேலும் ஊக்கத்துடன் செயல்பட இந்த விருது சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்றார் அவர்.
சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் தனியார் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தங்க மயில் விருதுகளை ஐஓடி என்றழைக்கப்படும் இயக்குநர்கள் பயிற்சி மையம் வழங்கி வருகிறது.
முருகப்பா குழுமம் மற்றும் ஜப்பானின் மிட்சுய் சுமிட்டோமோ இன்சூரன்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமே சோழா எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்.
விபத்து, பொறியியல், சுகாதாரம், கடல்சார் வணிகம் சார்ந்த பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 107 கிளைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்களும் உள்ளனர். இந்த நிறுவனம், 2017 நிதி ஆண்டில் ரூ.31,332 கோடி பிரீமிய இலக்கை கடந்தது.