சேமிப்புக் கணக்குகளின் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை மேலும் குறைக்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திட்டமிட்டு வருகிறது.
நாடு முழுவதும் சுமார் 40.5 கோடி பேர் எஸ்பிஐ-யில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை பெருநகரங்களில் ரூ.5ஆயிரமாகவும், கிராமப்புறங்களில் ரூ.1,000-ஆகவும் உயர்த்தியது எஸ்பிஐ.
இந்தத் தொகையை இருப்பில் வைத்திருக்காதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ரூ.1,771 கோடியை எஸ்பிஐ ஈட்டியது. இந்தத் தகவலை மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்டது.
குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தியதால், அந்த வங்கி பரவலாக விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெருநகரங்களில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.5ஆயிரத்திலிருந்து ரூ.3ஆயிரமாக குறைக்கப்பட்டது. அந்தத் தொகை இருப்பு இல்லாதவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த அபராதமும் குறைக்கப்பட்டது.
தற்போது, பெரு நகரங்களில் ரூ.3,000 இருப்புத் தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.30 முதல் ரூ.50 வரை (வரிகளுடன் சேர்த்து) அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சிறு நகரங்களில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.2ஆயிரமாகவும், கிராமப்புறங்களில் ரூ.1,000-ஆகவும் உள்ளது.
இந்தத் தொகை இருப்பில் வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை (வரிகளுடன் சேர்த்து) அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எஸ்பிஐ வங்கியின் 'டிஜிட்டல் பேங்கிங்' மேலாண் இயக்குநர் பி.கே.குப்தா, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
குறைந்தபட்ச இருப்புத் தொகையை கடந்த அக்டோபர் மாதம் குறைத்திருந்தோம். மீண்டும் குறைக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறோம். வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள கருத்துகளின் அடைப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம் என்றார் குப்தா.