டாலர் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளுக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வால் இந்திய மருந்து துறை நிறுவனங்களின் வருவாய் சரிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து எடல்வைஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க சந்தைகளில் இந்திய மருந்துகளுக்கு தேவைப்பாடு குறைந்து போனது மற்றும் அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் இந்திய மருந்துத் துறை நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த நிறுவனங்களின் வரிக்கு முந்தைய மற்றும் வரிக்கு பிந்தைய லாபம் முறையே 15 சதவீதம் மற்றும் 19 சதவீதம் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய் குறையும் என்றபோதிலும் மருந்து நிறுவனங்கள் உள்நாட்டு விற்பனையின் மூலம் ஈட்டும் வருவாய் 12 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலாண்டில் மட்டும் இந்திய நிறுவனங்களின் 246 தயாரிப்புகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும், மொத்தத்தில் 2017-18ஆம் நிதி ஆண்டு இந்திய மருந்து துறை நிறுவனங்களுக்கு சவாலானதாகவே இருக்கும் என எடல்வைஸ் அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.