ஐடிஎஃப்சி வங்கி - கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் இணைப்புக்கு ஒப்புதல்
ஐடிஎஃப்சி வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனமான கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் ஆகியவற்றின் இணைப்புக்கு சம்பந்தப்பட்ட நிர்வாக குழுக்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
இதுகுறித்து ஐடிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் லால் சனிக்கிழமை கூறியது: கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் நிறுவனத்துடன் இணைவது ஐடிஎஃப்சி வங்கிக்கு திருப்புமுனையாக இருக்கும். இந்த இணைப்பின் மூலம் தொழில்நுட்ப ரீதியில் மேம்பாடு ஏற்பட்டு ஐடிஎஃப்சி உலகளாவிய வங்கியாக உருவெடுக்கும். 139:10 என்ற விகிதத்தில் இந்த இணைப்பு இருக்கும். அதன்படி, கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் தலா 10 பங்குகளுக்கு, ஐடிஎஃப்சியின் 139 பங்குகள் வழங்கப்படும். இரு நிறுவனங்களின் இந்த இணைப்பு நடவடிக்கை அடுத்த மூன்று காலாண்டுகளுக்குள் முழுமையடையும். இணைப்புக்குப் பிறகான புதிய நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.88,000 கோடியாக இருக்கும். மேலும், அந்த நிறுவனம் 194 கிளைகளையும், 9,100 மைக்ரோ ஏடிஎம் முனையங்களையும், 50 லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டதாக விளங்கும் என்றார் அவர்.