தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.13,000 கோடியை திரட்ட ஹெச்டிஎஃப்சி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், ரூ.13,000 கோடிக்கு மிகாமல் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை பங்கு ஒதுக்கீட்டின் மூலமாக இந்த தொகையை திரட்ட முடிவு செய்யப்பட்டது. பங்குதாரர்களின் ஒப்புதலுடன் இந்த நிதி திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று ஹெச்டிஎஃப்சி நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரூ. 2 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குகளையும் முன்னுரிமை அடிப்படையில் ரூ.1,726.05 என்ற விலையில் ஒதுக்கீடு செய்ய இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அசீம் பிரேம்ஜி அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு முதலீட்டாளர்களுக்கு 6.43 கோடி பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.11,103.66 கோடி திரட்டப்படவுள்ளது.
மேலும், தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கான பங்கு ஒதுக்கீட்டின் மூலம் ரூ.1,896 கோடி திரட்டிக் கொள்ளவும் இயக்குநர்கள் குழு அனுமதியளித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.8,500 கோடியை திரட்ட முன்னுரிமை பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளது. அதில், பங்கேற்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டே ஹெச்டிஎஃப்சி நிறுவனம் இந்த நிதி திரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
முன்னுரிமை பங்கு வெளியீட்டில் பங்கேற்பதன் மூலம், ஹெச்டிஎஃப்சி வங்கியில், ஹெச்டிஎஃப்சி நிறுவனம் தற்போது வைத்திருக்கும் பங்கு மூலதனத்தின் அளவை அதே நிலையில் தக்கவைக்க முடியும்.
இதுதவிர, விரிவாக்க திட்டங்களுக்கு தேவைப்படும் மூலதன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதற்காவும் இந்த நிதி பயன்படுத்திக் கொள்ளப்படும் என ஹெச்டிஎஃப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.