ஜிஎஸ்டி அமலாக்கத்தின் எதிரொலியால் நடப்பு நிதி ஆண்டில் ஆடைகள் ஏற்றுமதி 10 சதவீதம் அளவுக்கு சரியும் என இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் (சிஎம்ஏஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் ராகுல் மேத்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2016-17 நிதி ஆண்டில் 1,738 கோடி டாலராக காணப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி 2017-18-இல் 4 சதவீதம் குறைந்து 1,670 கோடி டாலரானது. இந்த நிலையில், கடந்த 2017 அக்டோபர் முதல் ஆடைகள் ஏற்றுமதியில் தொய்வு நிலையே தொடர்ந்து வருகிறது. இதற்கு ஜிஎஸ்டியை அமல்படுத்தியதே முக்கிய காரணம். ஏனெனில், அதில் சேர்க்கப்பட்டிருந்த பல உள்ளீட்டு வரிகள் திருப்பி அளிக்கப்படவில்லை.
இதனால், ஆடைகள் ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டில் மாதத்துக்கு 8-9 சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. இதனை வைத்துப் பார்க்கும்போது 2018-19-இல் ஆடைகள் ஏற்றுமதி 10 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மொத்த ஆடைகள் ஏற்றுமதியில் 70 சதவீதம் பருத்தி ஆடைகளின் பங்களிப்பு. இந்த நிலையில், பருத்தி விலையில் 20 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளதும் ஏற்றுமதி துறையை வெகுவாக பாதித்துள்ளது என்றார் அவர்.