ஹோண்டா கார்களின் விலை ரூ.35,000 வரை உயருகிறது
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கார்களின் விலையை ரூ.35,000 வரை உயர்த்த ஹோண்டா முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இடு பொருள்களுக்கான செலவினம் அதிகரிப்பு, சுங்க வரி உயர்வு, சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் கடந்த சில மாதங்களாகவே நிறுவனத்தின் செலவினம் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. வேறு வழியின்றி இதனை சமாளிக்கும் வகையிலேயே, தற்போது கார் விலையை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா கார்களின் விலையை மாடல்களுக்கேற்ப ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை உயர்த்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். அண்மையில் சலுகை விலையில் அறிமுகமான அனைத்து புதிய அமேஸ் கார்களின் விலையும் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து உயர்த்தப்படவுள்ளது என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனம், ரூ.4.73 லட்சத்தில் பிரையோ கார் முதல் ரூ.43.21 லட்சம் விலையுடைய அக்கார்டு ஹைபிரிட் கார்கள் வரை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. சுங்க வரி உயர்வையடுத்து கடந்த ஏப்ரலில், ஆடி, ஜேஎல்ஆர் மற்றும் மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனங்கள் கார்களின் விலையை ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் அதிகரித்தன.
ஹுண்டாய் மோட்டார் இந்தியாவும் ஜூன் முதல் கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, ஹோண்டாவும் தனது தயாரிப்புகளின் விலையை தற்போது உயர்த்துவதாக அறிவித்துள்ளது.